வேம்பின் மருத்துவம்_1

சாதாரண வேப்ப மரம்

மந்த பேதி

50 கிராம் சுக்கைத் தட்டிப்போட்டு கஷாயம் செய்ய வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி வேப்ப மரப்பட்டைத் தூளை கலந்து அருந்த வேண்டும். தினம் இரு வேளை வீதம் மூன்று நாட்கள் உட்கொண்டால் மந்த பேதி குணமாகும்.

அஜீரணம்

ஒரு தேக்கரண்டி அளவு வேப்பமர பட்டைத் தூளை எடுத்து சீரகக் கஷாயத்தில் கலந்து உட்கொண்டால் வயிற்று மந்தம், அஜீரணம் ஆகியன குணமாகும். தினசரி இரு வேளை வீதம் மூன்று நாட்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

அம்மை நோய்

அம்மை நோய் ஏற்பட்டவர்களை வேப்ப இலையைப் பரப்பி அதில் படுக்கச் செய்வர். வேப்ப இலைகளைக் கொண்டு அம்மைக் கொப்புளங்களை தடவிக் கொடுப்பர்,இதனால் நோயின் வேகம் தணியும். வேப்பிலைகளை வீசுவதால் ஏற்படும் காற்று நச்சுக் கிருமிகளை அழிக்கும் சக்தி வாய்ந்தது.

வேப்பிலைகளையும் மஞ்சளையும் சேர்த்து அரைத்து பூசினால் அம்மைப் புண்கள் விரைவில் குணமடையும்.

வேப்பங்குருத்து வயிற்றிலுள்ள கிருமிகள், பெறும் வியாதி எனும் குஷ்ட ரோஹங்கள், மந்தம், மகா விஷம், சுர நோய்கள், அம்மைக் கொப்புள இரணம் ஆகியவற்றைக் குணமாக்கும்.

இரத்த சுத்தம்

வேப்பங்கொழுந்தையும் மஞ்சளையும் சேர்த்து அரைத்து ஆறாத புண்கள், கட்டிகள், குஷ்ட ரோஹ புண்கள் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டினால் அவை விரைவில் குணமாகும்.

வேப்பங்கொழுந்தை அரைத்து சுண்டைக்காய் அளவு சாப்பிட்டால் வயிற்றிலுள்ள கிருமிகள் வெளியேறும்.

வேப்பிலை, பூ, இலைகளிலுள்ள ஈர்க்கு ஆகியவற்றைக் கொண்டு கஷாயம் தயாரிக்க வேண்டும். அதில் தினசரி இருவேளை 30 மில்லி அளவு அருந்த வேண்டும். அதனால் இரத்தம் சுத்தமாகி ஆரம்ப கால குஷ்ட நோய்களை குணப்படுத்தும்.

மலடு நீங்க

குழந்தைகள் பெற்றெடுக்காத சில பெண்களின் கருப்பையில் புழுக்கள் இருக்கும். அவற்றை மலட்டுக் கிருமிகள் என்பர். மலட்டுத்தனத்தை உண்டுபண்ணும் அக்கிருமிகளைப் போக்க,

200 கிராம் அளவு மலை வேம்பின் இலை, பூ, பட்டை ஆகியவற்றை சேகரித்து ஒரு பாத்திரத்தில் இட வேண்டும். அதில் இரு லீட்டர் நீர் ஊற்றி கால் லீட்டராக ஆகும் வரை வற்றக் காய்ச்ச வேண்டும். அதை வடிகட்டி இருவேளை அருந்த வேண்டும்.

மாதவிலக்கு ஆகும் நான்கு நாட்கள் தவிர்த்து இரண்டு மாதங்கள் தொடர்ந்து இதை பயன்படுத்தினால் கருப்பையிலுள்ள மலட்டுக்கிருமிகள் அழிந்து விடும்.

தாது புஷ்டி

சர்க்கரை வேம்பின் கொழுந்தைப் பறித்து உடல் சுத்தமுடனும் மனச் சுத்தமுடனும் வெறும் வயிற்றில் மென்று தின்ன வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நாற்பத்தெட்டு நாட்கள் சாப்பிட வேண்டும்.

இம்மருந்தை பயன்படுத்தும்போது உடலுறவை தவிர்க்க வேண்டும் . பகலில் வெளியே அலைவதையும் பகலில் தூங்குவதையும் தவிர்க்க வேண்டும். இரவில் கண் விழிக்கக் கூடாது.பாலன்னம், கனிகள் ஆகியவற்றைத் தவிர வேறு உணவுகள் உண்ணாமல் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.

இம்முறைகளை கடைப்பிடித்தால் காயசித்தி ஏற்படும். முதுமை,நரை, கண்திரை ஆகியன மாறி இளமை திரும்பும். ஆயுள் விருத்தியாகும்.

தோல் நோய்கள்

சர்க்கரை வேம்பின் மரப்பட்டைகளை நன்றாக காயவைத்து இடித்துத் தூளாக்க வேண்டும். வடிகட்டிய தூளில் நான்கு சிட்டிகையை தேனில் தினம் இருவேளை உண்டால் காசநோய் குணமாகும்.

மேற்குறித்த தூளில் நான்கு சிட்டிகை எடுத்து பசு நெய்யில் கலந்து உண்டால் எல்லா வகையான இருமல்களும் குணமாகும். தினம் இருவேளை மூன்று நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும்.

மேற்படி தூளை நான்கு தேக்கரண்டி அளவு எடுத்து 500 மில்லி தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்ச வேண்டும். மேற்சொன்னவாறு காய்ச்சிய எண்ணையை உடல் முழுவதும் பூசி சற்று நேரம் ஊறவைத்து நீராடினால் தோல் நோய்கள் குணமாகும். தோல் மினுமினுப்பு ஏற்படும்.


வேப்பம் பூ

மரத்திலிருந்து பூக்களைப் பறித்தவுடன் சிலர் பச்சடி, ரசம் ஆகியன தயாரித்து உணவுடன் பயன்படுத்துகிறார்கள். இது தவறு.

பூக்களைப் பறித்து காற்றோட்டமுள்ள பாத்திரத்தில் பத்திரப்படுத்த வேண்டும். அப்பூக்களின் நிறம் மாறி வதங்கிய பிறகு பயன்படுத்துவதே முறையாகும்.

நாட்சென்ற பூவானத்து பித்த அதிகரிப்பினால் ஏற்படும் சந்தி மூர்ச்சை எனும் சீரணக் கோளாறுகள், நீடித்த வாத நோய்கள், ரப்பம், மலக்கிருமித் தொல்லை ஆகியவற்றை குணமாக்கும்.

பித்தம்

வேப்பம் பூத்தூளை நான்கு சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து உட்கொண்டால் பித்தத்தினாலும் அஜீரணத்தினாலும் ஏற்பட்ட வாந்தி நிற்கும்.

வேப்பம் பூத்தூளை நான்கு சிட்டிகை எடுத்து 30 மில்லி அளவு சீரக குழயத்தில் கலந்து அருந்தினால் அரோசகம் என்னும் பசிக்குறைவு மற்றும் அஜீரணக்கோளாறுகள் என்பன குணமாகும்.

வாய்வுத்தொல்லை

வேப்பம் பூத்தூளை நான்கு சிட்டிகை அளவு எடுத்து இஞ்சி சாற்றில் கலந்து உட்கொண்டால் அடிக்கடி ஏற்படும் ஏப்பம் குணமாகும்.

வேப்பம் பூத்தூளை நான்கு சிட்டிகை எடுத்து, இரு சிட்டிகை பெருங்காயத்துடன் சேர்த்து, வெந்நீரில் கரைத்து உட்கொண்டால் அவ்வப்போது ஏற்படும் வாய்வுத்தொல்லைகள் நீங்கும்.

வேப்பம் பூத்தூளை நான்கு சிட்டிகை எடுத்து தனியா என்னும் கொத்துமல்லிக் கஷாயத்தில் கலந்து உட்கொண்டால் உடற்சூடு தனியும்.


வேப்பம் நெய்

வேப்பமர விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வேப்ப எண்ணெய்யாகும். இதன் சிறப்பு கருதி வேப்பம் நெய் என கூறப்படுகின்றது.

மாட்டின் பாற்காம்புகளில் வலி ஏற்படாமலிருக்க வேப்ப நெய்யை தடவுவார்கள். மாட்டின் கழுத்தில் ஏற்படும் புண்கள் மீது வேப்பம் நெய் தடவினால் விரைவில் குணமாகும்.

வேப்ப நெய்யை தலை, முகம் தவிர்ந்த உடலின் ஏனைய பகுதிகளில் ஓரளவுக்கு தடவ வேண்டும். சற்று நேரம் கழித்து அரப்புத்தூள் தேய்த்து நீராட வேண்டும். இதனால் எல்லா வகையான தோல் நோய்களும் குணமாகும்.


வேப்பம் பிண்ணாக்கு

வேப்ப விதைகளை அரைத்து எண்ணெய் எடுத்த பின் இருக்கும் சக்கையே பிண்ணாக்கு ஆகும். வேப்பம் பிண்ணாக்கு மிகுந்த மருத்துவ குணம் கொண்டது.

திரிதோஷம் என்பது வாதம், பித்தம், கபம் என்பதை குறிக்கும். சலாதிக்கம் என்பது உடல் முழுவதும் ஏற்படும் வீக்கத்தையும் நீரிழிவு நோயையும் குறிக்கும்.

தேமல்-படை

மேற்குறித்த மாத்திரையின் மருத்துவப் பெயர் நிம்பாதிச் சத்து எனக் கூறுவார்கள். நிம்பாதிச்சத்து மாத்திரைகளை பசு நெய்யில் கலந்து சாப்பிட்டால் வாத சிரஸ்தாபம் எனும் தலை நடுக்கல் வாதம் குணமாகும். தினம் இருவேளை வீதம் பயன்படுத்த வேண்டும்.

இஞ்சிச் சாறுடன் நிம்பாதிச்சத்து மாத்திரைகளை கலந்து உட்கொண்டால் கபதோஷம் விலகும். எலுமிச்சம்பழ ரசத்துடன் நிம்பாதிச்சத்து மாத்திரைகளை கலந்து சாப்பிட்டால் பித்தம் தணியும். சுக்குத்தூளுடன் இம்மாத்திரைகளை பொடித்துச் சேர்த்து தேன் கலந்து உட்கொண்டால் வாத தோஷங்கள் குணமாகும். சீரக கஷாயத்தில் இம்மாத்திரைகளைப் பொடித்து இட்டு கலந்து உட்கொண்டால் ஜீரணக் கோளாறுகள் குணமாகும்.

வேப்பம் பிண்ணாக்கைத் தண்ணீரில் ஊற வைத்து உடல் முழுவதும் பூசி சற்று நேரம் கழித்து நீராடினால் தொழில் ஏற்பட்ட தேமல், படை, வரட்சி ஆகியன குணமாகும்.

நில வேம்பு

நிலவேம்பு மலைச்சாரல் பகுதிகளில் குற்றுச் செடிகளாக வளரும். பல்வேறு மருந்துகளில் துணை மருந்தாகச் சேர்க்கப்படுகிறது.

நிலவேம்பின் வேரை மட்டும் எடுத்து நன்கு உலர்த்த வேண்டும். பின்பு அதை இடித்து தூளாக்கி மெல்லிய துணியில் வடிகட்ட வேண்டும். இப்படி வடிகட்டிய தூளில் நான்கு சிட்டிகை எடுத்து தேனில் கலந்து உட்கொள்ள வேண்டும். இதனால் பித்த மயக்கம் என்னும் தலைச்சுற்றல் நோய் குணமாகும்.

நிலவேம்பு வாத சுரம், மேக நீர்க்கோவை, சுரதோஷம், பித்த மயக்கம் ஆகியவற்றை குணமாக்கும்.

மூளைக்கு வலிமை

மேற்சொன்ன தூளில் நான்கு சிட்டிகை எடுத்து கற்கண்டு தூளுடன் சேர்த்து உட்கொண்டு பால் அருந்த வேண்டும். இதனால் மனத்தெளிவு, மூளைக்கு வலிமை, ஆகியவை ஏற்படும்.

மேற்சொன்ன தூளில் நான்கு சிட்டிகை எடுத்து 5 கிராம் சுக்குத் தூளையும், சிறிது சர்க்கரையும் சேர்த்து வெந்நீரில் கலந்து உட்கொள்ள வேண்டும். அதனால் வாதக் கோளாறால் ஏற்படும் வீக்கம் குணமாகும்.

இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் குன்ம நோய்கள் குணமாகும். வயிற்றிலுள்ள எரிச்சல் குணமாகும்.

0 comments:

Post a Comment